பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தில் கைச்சாத்திட எதிர்க்கட்சிகள் மறுப்பு:

பாராளுமன்றத்தை கலைத்து உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை முன்வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், அந்த தீர்மானத்தில் ஒருபோதும் கைச்சாத்திடவோ ஆதரவு வழங்கவோ போவதில்லை என்று அக்கட்சிகள் பதலளித்துள்ளன.

இதேவேளை, மே மாதம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் செயலாற்றுகை குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று பிளவுகள் ஏற்பட்டன. 

கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கலந்துரையாடிய பஷில் ராஜபக்ஷ, பொதுத்தேர்தலை முதலில் எதிர்கொள்வதன் ஊடாக கட்சியை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள தரப்பு, சுயாதீன குழு மற்றும் ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமாகியுள்ள பொதுஜன பெரமுனவினர் என அனைத்து தரப்புகளையும் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது தகவல் கூறியுள்ளார். 

எனினும், அரசியலமைப்பின் பிரகாரம், அடுத்து ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமையால் ஜனாதிபதி ரணிலின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுவதே சிறந்தது என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் பாராளுமன்றத்தை கலைத்து உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் கொண்டுவரும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போதில்லை என்பதுடன், உங்களது நேர்மையை வெளிப்படுத்த விரும்பினால், முதலில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிபெறச் செய்ய வைக்குமாறு மறுமொழி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியும் முதலில் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதில் பெரிதாக ஆர்வம் காட்டாமையினால் இந்த அழைப்பை கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட தேர்தல் செயலாற்றுகை குழுவில் தேர்தலுக்கான அறிவிப்பு குறித்து பேசப்பட்டது. 

அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும். யார் ஜனாதிபதியானாலும் ஓரிரு மாத்துக்குள் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும் என்று இங்கு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *