தேர்தலை புறக்கணிப்பதால் பயனில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலைப்புறக்கணிப்பதால் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  70ஆண்டுகளாக தென்னிலங்கை தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளபோதும் தற்போது வரையில் ஏமாற்றமே எஞ்சுவதாக உள்ளது. ஆகவே தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமான முடிவுகளை நாம் எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு முன்னால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதற்கான தெரிவொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவால் எவ்விதமான பயனுமில்லை. காரணம்  பிறகட்சிகள் தலையீடுகளைச் செய்து தமிழ் மக்களின் வாக்குகளை தம்வசப்படுத்துவதற்கே முயற்சிகளை எடுக்கும். ஆகவே  ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை விடவும்  எமது மக்கள் சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்குவதே பொருத்தமானதாகும்.

குறிப்பாக தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது விட்டாலும் தமிழ் மக்கள் எதற்காக இவ்விதமான முயற்சியை எடுக்கின்றார்கள் என்பதை அனைத்து தரப்புக்களுக்கும் உணர்த்தக்கூடியதாக இருக்கும்.

அதாவது, சிங்களத் தலைவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றமை தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றமை உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படுத்த முடியும். அதுமட்டுமன்றி  தென்னிலங்கையில் உள்ள தலைவர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி பெரும்பான்மையை பெறுவது கடினம் என்பதையும் உணர்த்த முடியும்.

இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் நாட்களில் நாம் வடக்கு கிழக்கு அரசியல்  சிவில் தலைவர்களைச் சந்தித்து மீண்டும் கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளோம். அந்தக் கலந்துரையாடல் மூலமாக பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவுள்ளோம்.

இதேவேளை பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக இருந்தால் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பிலும் தேர்தல் பிரசாரம்  வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கையாள்வதற்கு தனித்தனியாக குழுக்கள் அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்படவுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *