திருகோணமலையில் – பிள்ளையார் கோயில் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை!

திருகோணமலை- மடத்தடி வீரகத்தி பிள்ளையார் கோயில் காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுவந்த புத்தர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் சிறியளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

அப்பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது. அவ்விடத்திலேயே தற்போது பாரிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பிரதேசவாசிகள், இதுபோன்ற பௌத்தமயமாக்கலின் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு, சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், சிறிய புத்தர் சிலை வைப்பதில் தொடங்கி அது விகாரையாக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை அரச அனுசரணையுடன் சிலர் செய்து வருவதாகவும், இதற்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அரச நிர்வாகமும் துணை போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *