இலங்கை தொடர்பான மற்றுமோர் சர்ச்சைக்குரிய போர்க்குற்ற ஆதார காணொளி பதிவு ஒன்று நாளை சனல் 4 இல் வெளியாகவுள்ளதாக தகவல்!

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிக்கும் வீடியோ பதிவு உள்ளடங்கிய நிகழ்ச்சி ஒன்று நாளை பிரித்தானியாவின் முன்னணி ஊடகமான பி.பி.சி இன் சனல் 4 இல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஐ.நா மனிதௌரிமை கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள இச் சூழலில் சனல் 4 இல் வெளியாகவுள்ள குறித்த காணொளிப்பதிவால் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அளவில் இலங்கை பல சிக்கல்களை எதிர் நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவின் Channel 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், “இலங்கையின் கொலைக்களம்” (Sri Lanka’s Killing Fields) என்ற சர்ச்சைக்குரிய வீடியோவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கலை Channel 4 தொடர்ச்சியாக ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் Channel 4.

தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானாவே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆட்சி மாற்றத்திற்காக நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்படும் நபர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இரகசியங்கள் பல இந்த வீடியோவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *