இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடும்பத்தினருடன் இணைந்து வாழவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்:

இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடும்பத்தினருடன் இணைந்து வாழவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மற்றும் இலங்கை அரசிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுடைய கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் சிறப்பு முகாமிலே தடுத்துவைக்கப்பட்டு சிறைக் கைதிகள் பொன்று தமது வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இலங்கைக்கு சென்று குடும்பத்தினருடன் இணைத்து வாழ அனுமதி கோரிய போதும் இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இத்தகைய நிலையில் சாந்தன் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க இம்மாதம் 03ம் திகதி இந்திய துணைத் தூதுவரை தமிழ்த் தேசிய மக்கள் சந்திருந்த போது, இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களோடு இணைந்து வாழ வழியேற்படுத்தி கொடுக்குமாறும் கேட்டிருந்தோம். 

இத்தகைய நிலையில், சுகயீனம் காரணமாக சாந்தனின் உடல் நிலை மிக மோசமாக சென்றிருப்பதானது, அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதிருப்தியையும் சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் எடுத்தும் – இந்திய மத்திய அரசும், தமிழக அரசும், சிறிலங்கா அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீளத்திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும், குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இலங்கைச் சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *