விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் : யாழிலும் பெருமளவானோர் கைது!

விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 184 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் கஞ்சா மற்றும் 19,507 மாத்திரைகளும் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும், அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் நாட்களிலும் இந்த விசேட நடவடிக்கைகள் தொடரும் எனவும் , போதைப்பொருள் வியாபாரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *