திருமலை கந்தசாமி ஆலயத்தில் வழிப்பாட்டிற்கு முப்படையினரால் தடை!

திருகோணமலை, தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியானது பௌத்த விகாரைக்கு உரியது என்றே இவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமிமலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால் பௌர்ணமிதின பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்படுவது வழக்கமாக நிகழ்ந்து வரும் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெருகல், மூதூர், மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொது மக்கள் சென்றிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் அதிகளவிலான பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் நுழையவிடாது பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த யுர்சுஊ நிறுவனத்தின் இணைப்பாளர் லவகுச ராசா, சமூக செயற்பாட்டாளர் நவரெத்தினராசா அஞ்சலி, ஆலய தலைவர் வைரமுத்து விஜயநாயகம் உட்பட அகம் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு எதிராக புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அத்தோடு, நிகழ்வில் கலந்து கொள்ள ஏனைய பொதுமக்களும் தடை விதிக்கப்பட்டது.
குறித்த இடம் பௌத்த விகாரைக்கு உரியது எனவும் நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து பொதுமக்களை பொலிஸார் திருப்பி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *