இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது, அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் காணப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.
அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லாஹ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்த இஸ்ரேலிய அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவித்திருந்தது.
அத்தோடு, பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.