சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்: சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் செயற்திறமையாக நிறைவேற்ற தவறியதாலேயே  இரண்டாவது கடன் தவணை தொடர்பான மீளாய்வு கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக தெரியவருகிறது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் இரண்டாம் கடன் தவணையை செலுத்தாதது தொடர்பாக நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டாவது கடன் தவணை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்கள் சரியான முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளதாக தெரிவருகிறது. நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை அரசாங்கத்தினால் செயற்திறமையாக மேற்கொள்ள முடியாமல் போயிருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் வருமான இலக்குகளை அடைய வேண்டும் எனவும் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பது தொடர்பான அரச நிர்வாகத்துடன் தொடர்புடைய இலக்குகளை அடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த  விடயங்களை அடைந்துகொள்ள அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.  

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிர்வாக பிழைகள் சார்ந்த அறிக்கையின் பிரகாரம், இந்நாட்டில் ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் மத்தியில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் அதிகாரம் குவிவதும்,பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்துவதும்,ஊழல் மிகுந்த  குடும்ப ஆட்சி போன்றவற்றால் நாடு வங்குரோத்தடைந்து விட்டதாகவும்,இந்நாட்டில் இன்னமும் ஊழல் மிகு குடும்ப ஆட்சியின் நீட்சியே நடந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம், பொதுநலன் சார் பணிகள் சரிந்து,ஊழல் எதிர்ப்புத் திட்டம் இல்லாது, சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகம்  பலவீனமடைந்துள்ளது.

அதனால் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை நிபந்தனைகளில், பூர்த்தி செய்யப்பட்ட நிபந்தனைகள் மற்றும் பூர்த்தி செய்யத் தவறிய நிபந்தனைகள் யாது என கேட்கிறோம். அதேபோன்று நாயணய நிதியத்தின நிபந்தனைகள் யாவை? நிபந்தனைகளில் நிறைவேற்ற முடியாமல் போனதற்கான காரணம் என்ன?  அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறாேம்.

அத்துடன் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் மேலும் காலவரை ஒன்றை கோரி இருக்கிறதா? அவ்வாறு கோரி இருந்தால் அது எந்தளவு காலம்? எந்த விடயங்களுக்கு என கேட்கிறோம். அதேபோன்று இரண்டாம் கட்ட கடன் உதவியை எந்த காலப்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியுமாகும் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் நாட்டிலுள்ள தொழில் வல்லுனர்களிடம் இருந்து அரசாங்கம் அதிக வரி அறவிட்டு வருகிறது. எரிபொருள்,நீர், மின்சார கட்டணங்களை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே செய்யப்பட்டாலும்,2 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் வரி அறவீட்டை மேற்கொள்ளாது விட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *