நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 212 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
உயர்தரப் பரீட்சையின்போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகள் மட்டுமே பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலதிக பரீட்சை மண்டபப் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியும் எனவும் பரீட்சை மண்டப உதவி பொறுப்பதிகாரிகள் அல்லது கண்காணிப்பாளர்கள் கையடக்கத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதியில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.