ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்- பிரதமர் ஹரினி சந்திப்பு :

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார்.

நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்கை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதர்   அகியோ இசோமாட்டா உட்பட ஜப்பான் மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *