விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நோய் நிலைமையை கருத்திலெடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளது.

பொது சொத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர்  ஆஜராகியிருந்தனர். 

இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *