இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள், வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறைகாட்டியவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, JRP.சூரியப்பெரும, டொனால்ட் திஸாநாயக்க ஆகியோர் தொடர்பில், நேற்று (06) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில், இன்று மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாபப் பிரேரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொனால்ட் திஸாநாயக்க கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர். 1989இல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பாராளுமன்றில் இருந்த காலத்தில் பல நல்ல பணிகளை மக்களுக்கு ஆற்றியவர். அதன் பின்னர், பாராளுமன்றம் வர முடியாவிட்டாலும், தன்னுடைய பெயரில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை நிறுவி, இறக்கும் வரை தனது மாவட்ட மக்களுக்கு, தன்னாலான நல்ல பணிகளை செய்த ஒருவர். அவரது இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சூரியப்பெரும அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. 1970இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், அதில் தோல்வியடைந்த பிற்பாடு, கட்சியின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 1977இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து, கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு பெரிய பதவியை வகித்தவர். ஒரு ஆசிரியராக இருந்த அவர், பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்து நின்று, நாட்டுக்கும் மக்களுக்கும் நற்பணியாற்றியவர். எனவே, அவரது இழப்பால் கவலையுறுகின்ற அவரது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மறைந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரான கோசல நுவன் ஜயவீர, நாடாளுமன்றத்தில் ஒரு நான்கு மாதங்கள்தான் உறுப்பினராக இருந்தவர். அவர் ஒரு இளம் அரசியல்வாதியாக இந்தப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து, ஒரு குறுகிய காலத்துக்குள், இந்தப் பாராளுமன்றத்தில் பல குழுக்களில் உறுப்பினராக இருந்து, தன்னாலான பல நல்ல பணிகளை செய்த ஒருவர். 1987ஆம் ஆண்டு பிறந்த அவர் ஒரு பொறியியலாளர். அவரைப் பிரிந்து அவருடைய குடும்பமும், ஆதரவாளர்களும் படுகின்ற வேதனையில் நாங்களும் பங்கேற்கின்றோம். அவரது இழப்பால் வாடுகின்ற அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இத்தருணத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று, எமது நெருக்கத்துக்குரியவராக இருந்த மூத்த தலைவர், தமிழ் பேசும் மக்களையும் நாட்டையும் நேசித்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள். அவருடைய இழப்பு குறிப்பாக, இந்த நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும். எமது நாட்டில் தோன்றிய ஒரு சிறந்த தலைவராக அவரை நாங்கள் பார்க்கின்றோம்.
சிறுவயதிலிருந்தே அவரது அரசியல் பயணம் ஆரம்பித்தது எனலாம். அவர் மாணவராக இருந்த காலத்திலிருந்து, தன் மண்ணுக்காக மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர். பல தியாகங்களைச் செய்தவர். நியாயங்களுக்காக போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்ததனால், அன்றைய ஆட்சியாளர்களால் சிறைபடுத்தப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு தூய்மையான அரசியல்வாதி. தனது மாணவப் பருவத்திலிருந்து தமிழரசு கட்சியில் தன்னுடைய அரசியல் வாழ்வை ஆரம்பித்த அவர், மரணிக்கும் வரை அந்தக் கட்சியிலிருந்து, யுத்த காலங்கள் மற்றும் பல சவால் மிகுந்த காலகட்டங்களில் எல்லாம் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக, பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் செயல்பட்டிருக்கின்றார்.
எம்மோடு மிகவும் நேசமாக, நெருக்கமாக பழகிய ஒருவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமாக நாங்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வோம். “அவர்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வுக்காக, தான் என்றும் ஒத்துழைப்புவனாக இருப்பேன்” என்று அடிக்கடி என்னிடம் கூறியிருக்கின்றார்.
எனவே, அவ்வாறான ஒரு மூத்த தலைவரின் இழப்பு, அவருடைய கட்சிக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்த இனத்திற்கு மட்டுமல்ல குறிப்பாக, தமிழ் பேசும் மக்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவால் கவலையுற்றிருக்கின்ற அவருடைய பிள்ளைகள், உறவினர்கள், கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் உட்பட அவர் சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று கூறினார்.