யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் போராட்டம்!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து ஒரு நாள் அடையாள போராட்டம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்தனர். 

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளப் போராட்டம் இன்று காலை 10.15 மணிக்கு பல்வேது கோசங்கள் அங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டது. 

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைகழத்தின் ஆசிரியர் சங்க தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், 

இன்றைய அரசின் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் எமது பிரச்சினைகள் குறித்து பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தி, தீர்வை வழங்க அவர்கள் இணங்கிய நிலையில், தீர்வுகளை நடைமுறைபடுத்துவதில் காலதாமதம் அல்லது இழுத்தடிப்பு நிலை இருந்துவருவதால், அதற்கு எமது எதிர்ப்பை வெளிக்கொணரும் வகையிலும் தீர்வை விரைவுபடுத்தக் கோரியுமே இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம். 

இந்த அரசு தற்போது கொண்டுவந்துள்ள சம்பள சீரமைப்பில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருக்கின்றது. 

அதேபோன்று கொரோனா உள்ளிட்ட பல அனர்த்தங்களால் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மாணவர் அனுமதிப்பும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை உரிய ஆராச்சி முறையிலான கற்பிதங்களை செய்வதில் பல நெருக்கடிகள் இருக்கின்றன. 

மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கு தரம் மிக்க பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. அதை இந்த அரசு நிறுத்தியுள்ளது. 

விரிவுரையாளர்கள் பலர் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்களது வெற்றிடங்களை நிவர்தி செய்வதற்கான நடவடிக்கையை இன்றைய அரசு எடுக்காதுள்ளதால் விரிவுரைதாளர்கள் கடும் சுமைகளுக்குளாகியுள்ளனர். அத்துடன் மாணவர்கள் கூடுதலான கற்றலை மேற்கொள்ள குறிப்பாக ஆராச்டிகளை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது. 

கல்வி மறுசீரமைப்பை இந்த அரசு முன்னெடுக்கின்றது. இந்த நடவடிக்கையின் போது உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாது மேற்கொள்ளப்படுகின்றது என எம்து தாய்ச்சங்கம் சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் அரசு அக்கறை கொள்ளாதிருக்கின்றது. 

இவ்வாறான பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில் அரசுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வை எட்டியிருந்தோம். 

ஆனால் அந்த தீர்வை நடைமுறைப்படுத்த அரசு பின்னடிக்கின்ற நிலை காணப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை விரைவுபடுத்தும் நோக்கிலேயே இந்த ஒரு நாள் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

எனவே நாட்டின் முதுகெலும்பான பல்கலைக்கழக கட்டமைப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *