புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, அதற்கான தற்போதைய சந்தைப் பெறுமதியுடன் அரசு நகைகளை கையளிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) வலியுறுத்தியுள்ளது.
இவ்வகையிலான கோரிக்கைகள், யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். சுந்தராம்பால் ஆகியோரால் வலியுறுத்தப்பட்டன.
“அடகு வைத்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, தற்போதைய சந்தை மதிப்பில் நகைகள் வழங்கப்பட வேண்டும். இது வெறும் தேர்தல் வாக்குறுதியாக மறைக்கப்படக் கூடாது. விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் மெதுவாக மத்திய அரசாங்கத்திடம் திருப்பி எடுக்கப்படுவது குறித்து தீவிரமான கவலை வெளியிடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கடந்த ஆண்டுகளில் மத்திய அரசாங்கங்கள் சூட்சுமமாக மீளப் பெற்றுள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை ஈ.பி.டி.பி. தொடர்ந்து எதிர்த்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களது கூற்றுப்படி,
2012ஆம் ஆண்டு மாகாண சபை அதிகாரங்களை நீக்கும் முயற்சி எதிர்க்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட வைத்தியசாலைகள் மத்திய அரசில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது.
1000 தேசிய பாடசாலைகள் திட்டம் மூலமும் மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கம் கைப்பற்ற முயன்றது.
தற்போதைய மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்கும் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் அதிகாரப் படிமுறைகள், மாகாண சபை அமைப்பை தளர்த்தும் நோக்கில் செயற்படுகின்றன. மாகாண சபை அதிகாரங்கள் எம்முடைய அரசியல் அபிலாசையின் அடிப்படையாகும். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
புலிகள் இயக்கம் செயல்பட்ட காலப்பகுதியில், பொதுமக்களிடமிருந்து பாதுகாப்புக்காக நகைகள் வாங்கப்பட்டு வைப்பகங்களில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இறுதி யுத்தக் காலத்தில், சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் அந்த வைப்பகங்களில் இருந்ததாக தகவல்கள் வெளியானன.
அவைப் பற்றிய உறுதியான விவரங்கள் இல்லை என்றும், முழுமையான நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை என்றும் ஈ.பி.டி.பி. தெரிவிக்கிறது. மேலும், நகைகள் அடகு வைத்தவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது ஆவணங்களை பாதுகாத்திருக்கிறார்களா என்பதிலும் ஐயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
அடகு வைத்ததை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்குபவர்களுக்கு சந்தைப் பெறுமதியின் அடிப்படையில் நகைகள் வழங்கப்பட வேண்டும் : தேர்தலுக்காக மட்டும் இச்செயல் பிரயோஜனப்படுத்தப்படக்கூடாது : விரைவில் சுயாதீன விசாரணை மற்றும் நிவாரணத் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளபை குறிப்பிடத்தக்கது.