நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அதிகமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் முதலான தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி நேற்று வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு விசேட பூஜை, வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சிறிய தேரொன்றில் எடுத்துச் செல்லப்பட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.
அக்கொடிச்சீலை இன்றைய தினம் ஏற்றப்பட்டு, ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ கிரியைகள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாட்களும் தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.