தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் மூவர்!

பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 

ஸ்கூட்டரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடியதாகவும், சம்பவ இடத்தில் 25 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

காயமடைந்தவர்களில் கொழும்பு 9 பகுதியைச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *