புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைபு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைபு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் கூடியது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்துக்கு கொண்டுவரப்படும் திருத்தங்கள் தொடர்பில் விமர்சன ரீதியில் இரண்டாவது தடவையாகவும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நாட்டில் நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டத்தை வரைபு செய்வதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த நிபுணர் குழுவை நியமித்தார்.
புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களுக்கு முகம்கொடுத்தல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனிநபர்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவது மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவது இந்த சட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கமாகும்.