காணிப்பிரச்சனை தொடர்பில் விவாதிக்க வடமாகாண எம்.பி க்களுக்கு பிரதமர் அழைப்பு:

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த இச் சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று செவ்வாய்கிழமை (20) பிரதமர் ஹரினி அமரசூரியவினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) மு.ப 11.00 மணி முதல் பி.ப 1.00 மணிவரை பாராளுமன்றத்தில் தனது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் 28.05.2025 திகதியிட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிணக்குகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மு.ப 11.00 – பி.ப 1.00 மணிவரை பாராளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்’ என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *