இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது.
டில்லியில் கடந்த 19 – 20 வரை நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கு சமாந்தரமாக, இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல்களின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக் குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொந்த தலைமை தாங்கினார். அதேவேளை இந்தியக் குழுவிற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தின்போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஐந்து முக்கிய தூண்களுடன் இணைந்த துறைகளான, கடல்சார் பாதுகாப்பு மற்றும் காப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை முறியடித்தல், சட்டவிரோத கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்தல், இணையப் பாதுகாப்பு (சைபர் பாதுகாப்பு), அத்துடன் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.