அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் என்னால் எந்த வாக்குறுதியும் வழங்க முடியாது நீதி அமைச்சர்:

கடந்த 14 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கேள்வி நேர விவாதத்தின் போதே அமைச்சர் ஹர்சன நாணயகாரவிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் ஒரு கைதியின் மனைவி இறந்து அவரது பிள்ளைகளை வளர்த்து வந்த பேத்தியும் இறந்த நிலையில் தற்போது அவரது பிள்ளைகள் இருவரும் தனியாக உள்ளனர். எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா?

சிறீதரன் எம்.பியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பொதுமன்னிப்பு வழங்குவது ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சிற்கும் மட்டுமே அதிகாரமுள்ளது.

பங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்பங்கள் சந்திப்பதற்கு பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதை நாம் பரிசீலித்து வருகின்றோம்.எனினும் என்னால் எந்த வாக்குறுதியும் வழங்க முடியாது.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *