சாரணர் இயக்கத்தில் சிறப்பாக செயற்பட்டு அனைத்து தகைமைகளையும் நிறைவு செய்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர்கள் இருவரிற்கு திரிசாரணர் பிரிவில் வழங்கப்படுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
சாரணர் இயக்கத்தின் தந்தை என போற்றப்படும் “பேடன் பவல்” அவர்களின் பிறந்த தினமான நேற்றைய தினம் (22-02-2023) இலங்கை சாரணர் சங்கத்தினால் மாத்தளை மாவட்ட செயலகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றிலேயே இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளரினால் குறித்த விருது வழங்கிவைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர் குழுவைச் சேர்ந்த யோ.சுதர்சனன் மற்றும் ப.சாரங்கன் ஆகியோரே இவ் விருதினை பெற்றவர்களாவர்.
இவ்விருதானது 57 வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.