இந்தியாவில், முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மின்வாகன விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் லித்தியம் இருப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இதனால், மின்வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டிபிடிக்கப்பட்டிருப்பது, உள்நாட்டிலேயே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில் புவியியல் ஆய்வை தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களிலும் கடந்த 4 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட ஆய்வில் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உட்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும், இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லித்தியத்தின் முக்கியத்துவம்: மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயன் பேட்டரிதான். மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூலப் பொருளாக உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போல, லித்தியம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.