
இவ் ஆண்டின் ஆரம்பத்திலேயே (தை மாதத்தில்) யாழ் போதனா வைத்தியசாலையில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மட்டும் 300 ஆக காணப்படுவதாகவும், இதில் 33சத வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும் யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி, யமுனாநந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைமிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. 2021 ம் ஆண்டு முழுவதுமாக இலங்கையில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகை காணப்படுவதாக தெரிவித்தார்.
எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகும். குறிப்பாக டெங்கு நோய் அதிகம் பாதிப்பதுசிறுவர்களையே எனவே சிறுவர்களுடைய பெற்றோர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும்.
டெங்கு நோயானது சிறுவர்களை குறிப்பாக 15 வயது க்குட்பட்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றது. அடுத்ததாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கின்றது. அடுத்ததாக உடற்பருமன் உடையவர்கள் சலரோக நோயுடையவர்கள் அஸ்மா நோயுடையவர்களை பாதிக்கின்றது.
அடுத்ததாக, வீதிகளில் கழிவுகள் காணப்படுதல் மிக முக்கியமான பிரச்சனை 90விதமான மக்கள் வீதிகளில் கழிவுகளை வீசும் போது அதில் நுளம்பு பெருகுவதனால் டெங்கு நுளம்புஅதிகம் பரவுகின்றது.
அண்மை காலங்களில் டெங்கு நோய் பெருகுமிடங்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் மிக முக்கியமாகும் அவற்றினை டெங்கு விழிப்புணர்வு வாரம் மூலம் பொதுச் சுகாதார பரிசோதரர்கள் மூலம் செய்கின்றோம்.
புதிது புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன அவை அரைகுறையாக இருக்கும்போது அதில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு. யாழ் நகருக்கு அப்பால் புதிய நகரங்கள் போல கடைகள் கட்டப்படுகின்றன தோட்ட காணிகளில் வீடுகள் மண்டபங்கள் கடைகள் கட்டும்போது அங்கு நுளம்பு பரவுவதற்குரிய சூழல் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இறப்புக்களை தவிர்க்கவும் சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவதனால் மட்டுமே முடியும் என்றார்.