
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுவதாக யாழ்மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
இம்முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள்வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றசட்டத்திற்கிணங்க இம்முறை அந்தந்த வட்டாரங்களிலே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கமைய 243 வாக்கு எணணும் நிலையங்கள் யாழ் மாவட்டம் முழுவதுமாக அமைக்கப்படவுள்ளதோடு, 243 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னரே மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.