ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்காத நிலையில்இ, லங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு “கரி நாள்” என தெரிவித்து பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,
சிங்கள பேரின வாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம்.
தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது.
அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள்,
தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள்.
போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழினப்இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக்கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.
தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதிவழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும்.
அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.
எமது உரிமைகளை நாம் விடடுக்கொடுக்காமல் எமது இருப்பை உறுதி செய்வதற்கு நாம் போராட வேண்டும். ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.