யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஊர்காவற்துறை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நவ லங்கா நிதஹஸ் பக்ஷயவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை குழுக்களின் எந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.