நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் 1,617 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், 16 புதிய தொடரூந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேசமயம், 12 மலைநாட்டு தொடருந்துகளும், 4 கரையோர தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.