இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் மநிதப் படுகொலைகளையும், போர்குற்றங்களையும் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேசமட்டத்தில் அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சருமான கோட்டாபய ராஜபக்ச, மற்றும் அப்போதைய ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளது.
இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக சிறப்பு பொருளாதாரநடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.
இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதி செய்தி இது எனவும், மிகமோசமான மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களிற்கு நீதி அவசியம் இதன் காரணமாகவே இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை உருவாக்குவது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.