Home தாயக செய்திகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக மீண்டும் தெரிவானார் ரவூப் ஹக்கீம் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக மீண்டும் தெரிவானார் ரவூப் ஹக்கீம் !

41
0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு நேற்றுமுன்தினம்(07) புத்தளத்தில் நடைபெற்றது.

பேராளர் மாநாட்டின் போது கட்சியின் பதவி நிலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீமும் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவாகியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் அலிசாஹிர் மெளலானா, யு.டி.எம்.அன்வர், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் தவிசாளராக அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் விவகார, கலாசார பணிப்பாளராக மொஹம்மட் சப்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோரும் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் இம்முறை பேராளர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எல்.தவம் மற்றும் ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருக்கவில்லை.