இங்கிலாந்தின் மத்திய வங்கி, அதன் வட்டி விகிதத்தை 33 ஆண்டுகள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் 0.75 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அது 2.25 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஆகப் பெரிய உயர்வு என கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரிட்டன், அதன் ஆக நீண்ட பொருளியல் மந்தநிலையைச் சந்திக்கவுள்ளதாக வங்கி எச்சரித்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வட்டி விகிதம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், கடன் வாங்குவது குறையும் என்றும் மக்களின் செலவுகள் குறையும் என்றும் நம்பப்படுவதோடு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் நிலையில், பொருள்களின் விலையைக் குறைக்க அந்நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
அதேவேளை அமெரிக்க மத்திய வங்கியும் அதன் வட்டி விகிதத்தை, தொடர்ந்து 4ஆவது முறையாக அதிகரித்துள்ளது. வட்டி விகிதம், 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில் 15 ஆண்டுகளில் அதுவே ஆக அதிகம் எனவும் கூறப்படுகின்றது.