வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களுக்கிடையில் திருமணப்பதிவினை மேற்கொள்வதில் காணப்படும் வரையரைகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2021 இலக்கம் 18 சுற்று நிரூபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பி.அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்று நிரூபத்திற்கு அமைய இலங்கையர்கள் திருமணம் செய்வதற்கு தயாராகும் வெளிநாட்டவர்கள் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு மேலதிகமாக எந்தவொரு குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று பாதுகாப்பு துறையிடமிருந்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமாகும் என்ற நிபந்தனையும் காணப்பட்டது.
இந்த வரையரையை தளர்த்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்காக முன்னெடுக்க வேண்டிய மாற்று மாற்று வழிமுறை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பி.அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரையறைகளை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் குறித்த வரையறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.