பிரித்தானியாவில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இன்றையதினம் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்திருக்கிறார்.
பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.
எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.
கன்சர்வேட்டிவ் கட்சியால் அடுத்து ஒரு பிரதமரை தேர்வு செய்ய இயலுமா? அதன் மூலம் அந்தக் கட்சியால் நாடு பொதுத் தேர்தலை சந்திக்காமல் தடுக்க முடியுமா? என்பது இப்போது கேள்வியாக உள்ளது.
இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.