யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் நேற்று (18) கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து “வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்” என்னும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவிக்கையில், இந்த கட்டமைப்பானது வடகிழக்கின் அனைத்து பல்கலைக்கழகத்தினையும் உள்ளடக்கியதாக பலம்வாயந்த ஒரு அமைப்பாக இதனை உருவாக்கவுள்ளதாகவும், இது காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் வகையிலும் இந்த அமைப்பு செயற்படவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.விஜயகுமார் தெரிவித்தார்.