Home செய்திகள் முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் தொடர் முற்றுகைப் போராட்டம்!

முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் தொடர் முற்றுகைப் போராட்டம்!

40
0

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் முன்பாக நேற்று முதல் மீனவர்களால் முற்றுகைப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மீனவர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற போதிலும் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கடலில் வளங்கள் சட்டவிரோத தொழில் செய்வபவர்களால் அழிக்கப்படுவரும் நிலையில் தங்களது குடும்பங்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக முல்லைத்தீவிலிருந்து மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் சட்டவிரோத தொழில்களை நிறுத்துமாறு கோரியும் இரண்டாவது நாளாக 04.10.2022 இன்றும் போராட்டத்தினை தொடர்ந்துள்ளார்கள்.

இன்னிலையில் இரண்டாவது நாளான இன்று கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு எந்த இடையூறும் விளைவிக்காத வண்ணம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் சார்பில் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள் மீனவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்கஅதிபர்(காணி)சி.குணபாலன் ஆகியோர் போராட்டக்காரர்களை இவ்வாறு சந்தித்துள்ளார்கள்.

அரசாங்க அதிபரிடம் மீனவர்களால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கையினை கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தெரியப்படுத்தியுள்ளார். இன்றும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தொடர்புகொண்டு தெளிவுபடுத்தியுள்ளார் இன்று மாலைக்கிடையில் பணிப்பாளர் நாயகம் மீனவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி ஏதாவது ஒரு முடிவினை பெற்றுத்தருவதற்கு தயாராக இருப்பதாக அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

நிர்வாக இடம்மாற்றங்கள் தொடர்பில் பணிப்பாளர் நாயகத்தினாலோ அல்லது அரசாங்க அதிபராலோ உடனடியாக செய்யமுடியாது ஒரு இடம்மாற்றம் செய்ய வேண்டுமாக இருந்தால் பொதுச்சேவை ஆணைக்குழு தான் தீர்மானிக்கும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை சந்தித்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அதிகாரிகளை மாற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளதுடன் நாளை காலை போராட்டகாரர்கள் தங்கள் குடும்பங்கள் பிள்ளைகளுடன் வந்து பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.