Home செய்திகள் மட்டக்களப்பு கடல் பகுதியில் வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது:

மட்டக்களப்பு கடல் பகுதியில் வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது:

56
0

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேரை மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து படகுகளுடன் ஶ்ரீலங்கா கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அறுபது (60) ஆண்கள், பதினான்கு (14) பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பதினொரு சிறார்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதான 85 நபர்களும், படகும் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதேவேளை, கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மட்டக்களப்பு துத்திவரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு (04) டிங்கிகளுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படைக் கப்பலான ரணவிக்ரமினால் அவர்கள் கைது செய்யப்பட்டு, சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேற முயற்சித்து, உயிரை பணயம் வைத்து, சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.