நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு “பொது மன்னிப்பு” வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டுள்ளார்.
இனிமேல், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2017 ஓகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.