மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அனைத்தும் பொதியிடப்பட்ட நிலையில் மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.
மேலும் – அனுராதபுரத்தில் இருந்து கொண்டுவரப்படும் பொதியிடப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நீதவான் முன்னிலையில் அவற்றை பிரித்தெடுத்து, மாதிரிகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் நீதவான் இன்று கட்டளை பிறப்பித்திருந்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதியோரத்தில் நீர் விநியோகத்திற்கான குழாய்களைப் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டிய பணியாளர்கள், இரண்டு மனித எலும்புக்கூட்டு எச்சங்களைக் கண்டு காவல்துறையினருக்குத் தெரிவித்ததையடுத்து, அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதில் சுமார் 80 பேருடைய மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.