
நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அழைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கோட்டபாய ராஜபக்ஷவை நாட்டிற்று மீண்டும் அழைத்து அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என மொட்டுக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்துவரும் வேளையில், கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்ப உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிவரும் சூழலிலும் முப்படையினரை நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறான அவசர வர்த்தமானி அழைப்பு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில், ‘பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு , ஆயுதந்தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.