நட்டமீட்டும் அரசாங்க நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அத்தியாவசியமாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
த எக்கோனோமிக் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு மேலதிகமாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ரெலிகொம் நிறுவனம் போன்றவற்றை தனியார்மயப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை சிக்கலானது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி 40 வருடங்களாக அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய முதலீடுகள் தொடர்பில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்யும்போது, தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் எதிர்ப்புகள் தொடர்பில் தாம் கவலைப்படப் போவதில்லையெனத் தெரிவித்துள்ள அவர், மக்களே எமக்கு முக்கியமானவர்கள் என்றும் நிலைமை சீரடைந்துவருவதுதொடர்பில் மக்கள் உணரத்தொடங்கினால் அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் எம்முடன் இருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு 2018 ஆம் ஆண்டிலிருந்த நிலைமையை மீண்டும் கொண்டுவருவதற்கு குறைந்தது இரண்டு மூன்று வருடங்களாகலாம். 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலும் வருடத்தின் இறுதிப் பகுதியில் அந்த நிலை மாற்றமடையலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.