நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீதிகளில் விழுந்தமையால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு, நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (02) விடுமுறை வழங்குவதற்கான உத்தரவை, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே விடுத்துள்ளார்.
அம்பகமுவ, பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 05 வயது முன்பள்ளிச் சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மண்சரிவினால் ஹற்றன், கொழும்பு வீதியில் கினிகத்தேன தியகல பகுதியிலும் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை தியகல பகுதியிலிருந்து கொத்மலை ஊடாக கம்பளை வீதி,மொரப்பே கோவிலுக்கு அண்மித்த பகுதியும் மூடப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றது.
குறித்த நீர்த்தேக்கங்களின் நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் மலைகளுக்கு மண் மேடுகளுக்கும் சமீபமாகவும் மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களில் வாழ்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.