மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக நல்லூர்த் திருவிழாக் காலத்தில் பக்தர்கள் கட்டாயம் ‘மாஸ்க்’ அணியவேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:
மீண்டும் கொரோனாப் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால் ஆலயத்துக்கு வருபவர்கள், உரிய முறையில் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும், கைகளை அடிக்கடி சவர்க்காரம் பாவித்து கழுவுதல் வேண்டும், இயன்றளவு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
தடிமன், காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் ஆலயத்துக்கு வருகை தருவதை தவிர்த்து கொள்ள வேண்டும்
உற்சவகாலத்தில் ஆலயத்தின் சுற்றாடலிலும் ஆலயத்துக்கு வரும் பாதைகளிலும் தாங்கள் உள்ளெடுக்கக் கூடிய குடிதண்ணீர் மற்றும் உணவுப் பொருள்கள் சுகாதாரமானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதோடு அது தொடர்பிலான முறைப்பாடுகளை 021 222 2645 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு வழங்க முடியும்.
குழந்தைகள், சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகள், சிற்றுண்டிகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு அல்லது விநியோகிக்கப்படும் பட்சத்தில் உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு அவற்றை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்ப்பதோடு குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அதிகளவான சீனி (சிவப்பு, செம்மஞ்சள் ஒட்டப்பட்ட குடிபானங்கள்) நிறமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளை இயன்றளவில் தவிர்த்துப் பிள்ளைகளின் நலனைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்,
வீதியில் பரப்பப்பட்டிருக்கும் மண்ணின் சுகாதாரத்தைப் பேணும் முகமாக ஆலய சுற்றாடலில் வதியும் மக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களைத் திருவிழா நாள்களில் வீதிக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், ஆலயத்துக்கு வரும் அடியவர்கள், தம்முடன் தமது வளர்ப்பு நாய்களை அழைத்து வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் அவை கட்டாக்காலி நாய்களாகக் கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் அல்லது பதிவுக் கட்டணத்தின் பிரகாரம் சபையால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் குடியிருப்பாளர்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு வழங்கப்படும் பூச்சி மருந்தை நாய்கள் உட்கொள்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆலயத்தின் சுற்றாடலில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருள்களை எடுத்துவருதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அங்கப்பிரதட்சணம் மற்றும் அடியழித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் அடியவர்களின் நன்மை கருதியும் மண்ணின் சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் ஆலயத்தின் சுற்றாடலில் வெளி வீதித்தடைக்குள் பாதணிகள் அணிந்து செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறும் கோவில் வீதிகளில் பரப்பப்பட்டுள்ள மணலின் மீதிருந்து உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் (கச்சான் கோது போடுதல், கார உணவு மீதிகள் படிந்த ரெஜிபோம் மற்றும் பேப்பர், பைகள் போடுதல் போன்றவற்றைத் தவிர்த்தல்) கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அவற்றைக் கழிவுத் தொட்டிகளில் இட்டு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆலயச் சூழலில் நடமாடும் போது மக்கள் கழிவுப் பொருள்களை வீச வேண்டிய சந்தர்ப்பங்களில் அவற்றைத் தரம் பிரித்து அதற்கென வைக்கப்பட்டுள்ள கழிவுத் தொட்டிகளில் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
திருவிழாக் காலங்களில் இயங்கும் தற்காலிக உணவு கையாளும் நிலையமாக அமையும் வியாபார நிலையமானாலும், உணவுகையாளும் நிலையத்தின் அடிப்படைத் தன்மைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், உணவு கையாள்வோர் தற்காலிக அடிப்படையிலேனும் அனுமதிகளை வைத்திருத்தல் அவசியம். இந்த நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும். மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தவிர்க்கப்பட முடியாதது. அதனால் நேர காலத்துடன் எமது பணிமனையின் தலைமைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகரைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
ஆலயச் சுற்றாடலில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் அவற்றில் ஒலிபெருக்கிகளைச் சத்தமாக அலறவிடுவதோ திரைப்படப் பாடல் இசைப்பதையோ தவிர்த்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறீர்கள்.
வீடுகளில் குறித்த தினங்களில் மட்டும் தண்ணீர்ப் பந்தல் மற்றும் அன்னதான நிகழ்வுகளை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றைச் சுகாதார நடைமுறைக்கு அமைய நடத்துமாறும் மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு சுற்றாடலைப் பேணுவதுடன் திருவிழாவை முன்னிட்டு பிற மாவட்டங்களில் இருந்து தாங்கள் காய்ச்சலுடன் வரும் பட்சத்தில் உரிய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு காய்ச்சலுக்கு உட்பட்டவரை மருத்துவ பரிசோதனை செய்தல் வேண்டும்.
கோவிலுக்கு அண்மித்த சூழலில் வதியும் பொதுமக்கள் உற்சவ காலத்துக்கு முன்பாக தங்கள் வீட்டுக் கிணறுகளை இறைத்தும் நீர்த் தாங்கிகளைச் சுத்தம் செய்தும் வாராந்தம் கிணற்றுக்குக் குளோரின் இடுவதற்கு சுகாதார பகுதியினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறீர்கள் – என் அறிவிக்கப்பட்டுள்ளது.