இலங்கையின் தற்போதைய ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல. அதுமட்டுமன்றி அவர் தனக்கு தேவையான வகையில் ஜனநாயகக் கொள்கையை மாற்றியமைக்கிறார். என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
முன்னால் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்போது தனதாட்சியில் அவசரகாலச் சட்டத்தை போட்டது மட்டுமன்றி மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடித்துள்ளமை நகைப்புக்குரியவை என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டத்தின் மீது கடந்த மே மாதம் 9ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களே சகல பிரச்சனைகளுக்கும் ஆரம்பமாக காணப்பட்டது.
அன்று அத்தாக்குதல்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியிருக்கவும் முடியாது. அதன் பின்னராக இன்று ஜனாதிபதியாகி இருக்கவும் முடியாது.
நல்லாட்டி அரசாங்கத்தில் சாதாரண சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய ரணில் விக்கிரமசிங்க தற்போது அவசரகாலச் சட்டத்தை எவ்வகையில் பயன்படுத்துவார் என்பது சந்தேகத்திற்குரியது.
ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவர் அல்ல. அவர் மக்கள் மீதோ, மக்கள் நலன்கள் மீதோ அக்கறை கொள்ளப்போவதில்லை.
பாராளுமன்றில் ரணிலுக்கு தற்போதுள்ள ஆதரவு நிலையற்றது. சகலதரப்பினரையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியில் புதிய சக்தியை வெகுவிரைவில் உருவாக்கும். ஜனநாயகரீதியான மக்கள் போராட்டத்தை முடக்க அவசரகாலச்சட்டத்தை பிரயோகித்தால் அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.