
இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் திரௌபதி முர்மு பதவிஏற்றுக்கொண்டார்.
இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
பதவியேற்றவுடன் பேசிய திரௌபதி முர்மு, “இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உரிமைகளின் அடையாளமாக நான் இருப்பேன். புனிதமான இந்த நாடாளுமன்றத்தில் இருந்து குடிமக்களை நான் வாழ்த்துகிறேன்.
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலு சேர்க்கின்றன. குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை. நான் இந்திய தேசத்தை வளமாக்க பணியாற்றிடுவேன். பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.
சிறிய கிராமத்தில் இருந்து வந்த நான் இந்த பதவிக்கு வந்தது பெருமையான தருணம். நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தேர்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.” என்று கூறினார்.