இலங்கையில் சிறையில் உள்ள 6 தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 21ம் திகதி இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 500க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வந்த சிறீலங்கா கடற்படையினர் ஒரு வள்ளத்தையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 6 தமிழக மீனவர்களும் இலங்கையின் வவுனியா சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த 6 மீனவர்களையும், அவர்கள் பயனித்த படகையும் விடுவிக்கக் கோரி நேற்று முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று (24) இராமேஷ்வரத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்கு செல்லாமல் நக்கூரம் இட்ட நிலையில் நிற்கின்றன. இதனால் நாளொன்றிற்கு சுமார் 5 கோடி இந்திய ரூபாய் நட்டம் ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளதோடு தமிழக அரசு உடனடியாக செயற்பட்டு 6 மீனவர் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.