
ஜனாதிபதி உட்பட முன்னாள் அரசியல்வாதிகள் விஐபி டெர்மினல் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் (VIP Terminel) முனையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சேவையில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக மக்கள் கிளர்ந்தெளுந்து கடந்த மூன்று மாதகாலமாக நடாத்திவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் உச்சக்கட்டமாக கடந்த சனிக்கிழமை (9) பல இலட்சம் மக்கள் திரண்டு கொழும்பை ஸ்தம்பிக்க வைத்ததோடு பாதுகாப்பு அரண்களையும் தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் அலரி மாளிகை என்பவற்றை தம்வசப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை (9) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வும், நேற்றைய தினம் (11) பசில் ராஜபக்ஷ வும் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து டுபாய்க்கு தப்பிச் எல்ல முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, அங்கிருந்த பயணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளும் தங்களது பணிகளை மேற்கொள்ள மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து அவருக்கு திரும்பிச் செல்ல நேரிட்டதாக காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களோடு விமானநிலைய வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை எப்படியேனும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வேண்டும் என கடும் முயற்சி எடுத்தும் பணியாளர்களின் கடும் எதிர்ப்பால் ஜனாதிபதி 4 விமானங்களையும் தவறவிட்ட நிலையில் இராணுவ பாதுகாப்போடு திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிரது.
