ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மத குருமாரும் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (7) கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெளத்த மத தேரர்கள் புறக்கோட்டை நோக்கி பேரணி ஒன்றினை ஆரம்பித்து புறக்கோட்டையில் சத்தியாகிரகம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதே வேளை, சர்வ மதத் தலைவர்கள் இணைந்து வத்தளையில் நேற்று அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை ஆரம்பித்து புறக்கோட்டை வரையில் அதனை முன்னெடுத்தனர்.
அத்துடன் சிலாபத்திலிருந்து கத்தோலிக்க மத அருட்தந்தையினரும் அருட் சகோதரிகள் உள்ளிட்ட பொது மக்கள் பேரணியொன்றினை ஆரம்பித்துள்ளதுடன் நேற்று அப்பேரணி நீர் கொழுமபை வந்தடைந்தது. அப்பேரணியானது 9 ஆம் திகதி கொழும்பு – கோட்டை கோட்டா கோ கமவை வந்தடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.
9 ஆம் திகதி, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இஸ்லாமிய மதத் தலைவர்களான மெளலவிமாரும் பேரணியாக கோட்டா கோ கம நோக்கி செல்லவுள்ளனர்.
சுரகிமு ஸ்ரீ லங்கா (இலங்கையை பாதுகாப்போம்)’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், களுபோவில பதும தேரர் உள்ளிட்டோரின் வழி நடத்ததலில் நூற்றுக்கணக்கான தேரர்கள் இந்த சந்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
குறித்த தேரர்களுக்கு கொழும்புக்குள் நுழையவும் புறக்கோட்டை பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததாக பொலிஸ் தலைமையகம் அறிவித்த போதும், நேற்று ( 7) அந்த உத்தர்வு நீதிமன்றினால் திருத்தப்பட்டு அந்த தடை அகற்றப்பட்டது. அதன்படி கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த தேரர்கள், ‘ பொய்யை தோற்கடிப்போம், நியாயத்தை நிலை நிறுத்துவோம் ‘ எனும் தொனிப் பொருளில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் தற்போது புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் தர்காலிக கூடாரம் அமைத்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கொழும்பில் மட்டும் மேலும் சில போராட்டங்களும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றன. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஊடகவியலாளர்கலும் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்தனர். அத்துடன் நுகேகொடையிலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் துவிச்சக்கர வண்டி பேரணி ஒன்றினை கொள்ளுபிட்டி வரை நடாத்தி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தது.