பிரித்தானியாவில் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் இரயில் ஊழியர்கள் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் தூய்மை பணியாளர்களும் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட மூன்று நாட்களும் பிரித்தானியா ஸ்தம்பிக்கும் என்றும், பல மில்லியன் பவுண்ஸ்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு இழப்பு நேரிடும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் இதுபோன்றதொரு நிலை 1970களுக்கு பின்னர் இதுவே முதல்தடவை என கூறப்படுகிறது.
ஜூன் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தொடர்புடைய தொழிலில் 500 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழப்பு ஏற்படலாம் என நம்பப்படுகிறது.
அத்தோடு இரயில் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தமானது மேலும் பரவி மேலதிக தொழிற்சங்கங்கள் இணையக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை, செவிலியர்கள், மருத்துவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவைகளும் வேலை நிறுத்தத்தில் ஆதரவளிக்கலாம் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.
தற்போதுள்ள பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடி நிலமையில் இவ்வாறானதொரு நிலை மேலும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.