மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஆண்டகையின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1967 இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்த அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, 1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 ஒக்டோபரில் திருநிலைப்படுத்தப்பட்டார்.
போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும், ஏழை மக்களுக்கு உதவவும் அவர் அரும்பாடுபட்டார்.
மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.