ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை அதிவேகமாக பரவிவரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.
கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்த இமானுவேல் மேக்ரான், “ தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம் எனவும் அதிக பரவலை தடுத்து உயிர்களை காக்க தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும்” என்றார்.
மேலும், மே மாதம் நடுப்பகுதியில் நாட்டில் சகஜ நிலை திரும்பும் என தாம் நம்புவதாகவும் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி, பகல் நேரத்தில் மக்கள் 10 கி.மீட்டர் சுற்றளவு மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.